COVID 19 மற்றும் டெங்கு தொற்றுக்களை தடுக்கும் முகமான கலந்துரையாடல் - 2021.01.27

நோய்த் தொற்றுக்களிலிருந்து எம்மையும் எமது சமூக மக்களினை பாதுகாக்க வேண்டிய தேவையினையும் அந் நோய்த் தொற்றுக்கள் எமது சமூகத்திற்குள் ஊடுருகுவதை தடுக்கும் நோக்கினையும் மையமாக கொண்டதான COVID 19, டெங்கு நோய் தொற்று தொடர்பான ஒரு விசேட கலந்துரையாடல் இன்று (2021.01.27) எமது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எமது பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், உதவி சுகாதார வைத்திய அதிகாரி, சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர், களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள் போன்றோர் பங்குபற்றியிருந்தனர்.


தற்போது எமது பிரதேச செயலகப் பிரிவில் COVID 19, டெங்கு நோய்த் தொற்றுக்களின் தாக்கம் எவ்வாறு காணப்படுகின்றது, தொற்றாளர்களின் விபரங்கள், பகுதிகள் என்பவற்றின் அடையாளங்கள் பற்றியதான வினாவல்கள் இடம்பெற்றது. இதன்போது,
சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகரினால் பிரதேச செயலக பிரிவுக்குரிய COVID 19 தொற்று தொடர்பாக தொற்றாளர்களின் விபரங்கள், பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நோயாளர்களின் விபரங்கள் மற்றும் தற்போது பாதிப்புக்குள்ளாகியுள்ளவர்களின் விபரங்கள் உட்பட ஏனைய பல விடயங்கள் பகிரப்பட்டன.


அந்த வகையில் கடந்த காலங்களில் 635 நபர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிலே 10 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதாகவும் 297 Antigen பரிசோதனைகள் மேற்கொண்டதில் 20 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு நேற்று (2021.01.26) 48 புதிய தொற்றாளர்கள் எமது பிரதேச செயலக பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
COVID 19 தொற்று எந்த வகையிலும் பரவலான தொற்றாக பொதுமக்களிடையே பரவக்கூடாது என்பதினை மையப்படுத்தியதாக அமையும் வகையில் சில தீர்மானங்கள் இக் கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்டன. அந்த வகையில்
- பாடசாலை மட்டங்களிலே சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவது குறைவாக காணப்படுவது அவதானிக்கப்பட்டமையினால் சுகாதார நடைமுறையினை இறுக்கமாக பின்பற்ற வைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்ற தீர்மானம் எட்டப்பட்டது. அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல் மற்றும் உரிய வகையிலாக சமூக இடைவெளியினை பேணுதல் போன்ற விடயங்கள் பின்பற்றப்படல் வேண்டும் என்பதோடு அவற்றினை கண்காணிப்பதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.
- பொதுச் சந்தை தொடர்பான கருத்து முன்வைத்தலின்போது பொதுச் சந்தையினை சந்தை தொகுதிகளில் நடத்த முனைவது இக் கால கட்டத்தில் பொருந்தாத ஒன்றாக காணப்படுவதினால் சமூக இடை வெளியுடன் பொதுவான பரந்த இடத்;திலையே சந்தை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
- வர்த்தக நிலையங்களிலே வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது சுகாதார பொறிமுறைகள் பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டதினால் சமூக இடைவெளியுடன் கூடிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தக நிலையங்கள் அவதானிக்கப்படுமிடத்து உடனடியாக அந் நிலையத்தினை மூடுவதற்குரிய செயற்பாட்டினை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- வழிபாட்டு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பொதுமக்கள் செயற்படுவதை அவதானிக்க முடிந்ததாக பொலிசார் தெரிவித்தனர். சமூக இடைவெளியுடன் கூடிய சுகாதார நடைமுறைகளை பொதுமக்களை பின்பற்ற வைப்பதற்குரிய செயற்பாடுகளை மேற்கொள்ள ஆலய நிருவாகிகளுக்கு அறிவிப்பதற்குரிய செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.
- அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு அமைய வெளிமாவட்டத்திலிருந்து வரும் நபர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவேண்டிய தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள போதும் நேரடியாக தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்பதினால் அதற்குரிய கண்காணிப்பு செயற்பாடு மேற்கொள்ளப்படல் வேண்டும் என்ற தீர்மானமும் எட்டப்பட்டது.

பின்னராக தற்போதைய சூழ்நிலையில் டெங்கு நோய்த் தொற்று தாக்கம் பற்றியதான கண்காணிப்பு அவசியமானதாக காணப்படுகின்றது. அந்த வகையில் இன்றைய சூழ்நிலையில் மக்கள் தங்களது சூழலினை தாங்களே சுத்தமாக வைத்து கொண்டு செயற்பட்டால் நோய்த் தொற்றுக்களிலிருந்து தம்மையும் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
மக்கள் உரிய வகையில் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது தொடர்பான முறைப்பாடு தமக்கு கிடைத்துள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் கருத்து தெரிவித்தார். குப்பைகளை அகற்றுவதற்குரிய செயற்பாட்டினை பிரதேச சபை ஊடாக நாம் மேற் கொண்டு வருகின்ற போதிலும் மக்கள் உரிய வகையில் செயற்பட்டால் மாத்திரமே கழிவுகளை அகற்றும் செயற்பாட்டினை பூரணமாக முன்னெடுக்க முடியும் என கூறினார்.
பராமரிப்பாரற்ற காணிகளிலே அதிகளவான குப்பைகூழங்கள் காணப்படுவதாகவும் அதன் மூலம் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுகின்ற காரணத்தினால் அக் காணிப்பகுதிகளினை கட்டாயம் சுத்தப்படுத்தல் வேண்டும் என்பதினால் சிரமதானங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும் இச் சிரமதான பணிக்குரிய ஆயத்தங்களையும் பராமரிப்பாரற்று காணப்படும் காணிகளின் உரிமையாளர்களின் விபரங்களை பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளையும் மேற் கொள்ளுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளின் சுத்தத்தினை அவதானித்து சுத்தப்படுத்தல் பணிகளில் ஈடுபடல் வேண்டும் அவ்வாறு தவறும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்தாவது காணிகளை சுத்தப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.
கிராம உத்தியோகத்தர்கள் தங்களது பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டங்களை மாதாந்தம் நடத்த வேண்டும் அத்தோடு டெங்கு நோய்க்குரிய அபாயங்கள் காணப்படு;ம் இடங்களை அடையாளம் கண்டு அவற்றினை சுத்தம் செய்வதற்குரிய செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டுமென்ற முடிவும் எடுக்கப்பட்டது.
வெற்றிலை தோட்ட செய்கையாளர்களின் தோட்டங்களில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள் அவதானிக்கப்பட்டதாக கிராம உத்தியோகத்தர் அறிவித்ததிற்கு அமைய வெற்றிலை தோட்ட செய்கையாளர்களின் தோட்டங்கள் அவதானிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை நாமே முன்னெடுக்க வேண்டும், எமது சுத்தமே எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாக்கும் என்பதினால் எம்மையும் எமது சூழலையும் நாம் சுத்தமாக வைத்துக்கொள்வோம்.



