டெங்கு மற்றும் Covid 19 நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் கலந்துரையாடல் - 2020.12.10

வருமுன் காக்கும் செயற்பாடே சிறந்ததொரு செயற்பாடாகும். கொரோனா தொற்றின் அபாயம் எம்மிடையே காணப்படுகின்ற போதிலும் அதனைப்போன்றதான அபாயம் மிக்க டெங்கு நோய் உருவாக்காத்தையும் பரவலையும் முன்னராகவே தடுப்பதற்கான தேவையும் நமக்குள்ளது.
டெங்கு பரவல் மற்றும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதான கலந்துரையாடலானது இன்று எமது பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி, சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர், உள்ளூராட்சி உதவியாளர், வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

கடந்த 2020.11.27ம் திகதி நடைபெற்ற டெங்கு சம்பந்தமான பிரதேச மட்ட குழுக்கூட்டத்திலே நுளம்பு பரவலை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் பற்றி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட்டமை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அந்தவகையிலே,
- கிணறுகளில் டெங்கு நோயைப்பரப்பக்கூடிய நுளம்புகளின் பெருக்கம் ஏற்படுவதனை தடுக்கும் முகமாக கிணறுகளை நுளம்பு வலை கொண்டு மூடுவது மற்றும் கிணற்றுக்குள் மீன் போடுவது போன்ற செயற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றமை பற்றியும் அதனை விரைவாக அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் செயற்படுத்தப்பட வேண்டும் என்கின்றதொரு முடிவும் எடுக்கப்பட்டது.
- குப்பைகளை அகற்றுவது தொடர்பான பிரதேச சபையின் செயற்பாடுகள் துரிதமாக இடம்பெறுவதென்பது மிகவும் அவசியமானதொரு செயற்பாடாக முன்வைக்கப்பட்டது.
- பாடசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் சுத்தமான சூழல் என்பதன் அவசியம் பற்றி கூறப்பட்டதோடு இன்றைய நாளில் அச்சூழல் எவ்வாறு காணப்படுகின்றது என்பது பற்றியதான கலந்துரையாடலின்போது சூழலின் தன்மை பற்றிய கண்காணிப்பென்பது நடைபெற வேண்டுமென்பதால் அதற்கானதொரு கண்காணிப்பு குழு அமைக்கப்படுவது தொடர்பானதொரு தீர்மானமும் எடுக்கப்பட்டது.
- பாடசாலையில் டெங்கு ஒழிப்புக்கான சிரமதானமென்பது மிகவும் அவசியமானதொரு செயற்பாடாக காணப்படுவதினால் அச் செயற்பாடு எக்காரணத்தினாலும் நிறுத்திவைக்கப்படலாகாது என்கின்றதொரு முடிவும் எட்டப்பட்டது.
Covid 19 தொற்று தொடர்பான கலந்துரையாடலின்போது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு Covid 19 தொற்று உறுதிசெய்யப்பட்டமை காரணமாக பாரியதொரு அபாய நிலையினை நாம் எதிர் நோக்கியதாக களுவாஞ்சிகுடி மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்ததோடு அத் தொற்று நிலையோடு தொடர்பு பட்டவர்களை அடையாளப்படுத்துவதென்பது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதெனவும் தெரிவித்தார்.

பொது மக்கள் சுயபாதுகாப்பினை மேற் கொண்டு Covid 19 தொற்றிலிருந்து தம்மை தாமே பாதுகாத்துகொள்ள வைப்பதே Covid 19 தொற்றை தடுப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையென சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்ததோடு அவ்வாறான வழிமுறையை பொதுமக்களை பின்பற்ற வைக்க கொள்கை ரீதியானதொரு இறுக்கமான நடைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றதொரு கருத்தினை முன்வைத்தார்.

அந்தவகையில்,
- பொதுமக்கள் முகக்கவசம் அணிவதினை கட்டாயமாக பின்பற்ற வைப்பதை நோக்கமாக கொண்டு அணியாதவர்களுக்கு எதிராக Covid 19 சட்டமூலம் மூலம் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டதோடு அதனை மக்களுக்கு அறிவிக்கவும் முடிவுவெடுக்கப்பட்டது.
- பொதுமக்கள் கூட்டம் கூடுகின்ற நிகழ்வுகளை நடாத்த எத்தணிப்பதை முடிந்தளவு குறைக்க வேண்டுமென்பதோடு அவ்வாறு கூட்டம் கூடவேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் கிராம உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரின் அனுமதி கட்டாயம் பெறப்படல் வேண்டும் என்பதோடு அனுமதியில்லாமல் நடாத்தப்படும் நிகழ்வுகளுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.
- சமுர்த்தி பயனாளிகளுக்கான நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பங்களில் சமுர்த்தி நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட பயனாளிகளை அனுமதிப்பதோடு சமூக இடைவெளியை பேணும் வகையிலான நடவடிக்கைகள் நடாத்தப்படல் வேண்டும் என்பதோடு சமுர்த்தி நிறுவனங்கள் ஒழுங்கு முறையில் கட்டம் கட்டமாக பயனாளிகளுக்கான சேவையினை வழங்கும் என்பதினால் பொதுமக்கள் சமுர்த்தி நிறுவனங்களின் அறிவிப்பை கேட்டு செயற்படவைக்க வேண்டுமென்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.
- வேறு மாவட்டத்திலிருந்து குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலிருந்து நிறுவனங்களுக்கு வருகை தரும் அலுவலர்கள் சமூகமளிப்பதினை முடிந்தளவு குறைப்பதுடன் சமூகமளிக்கும் உத்தியோகத்தர்கள் தொடர்பான ஏதேனும் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை நடவடிக்கையை மேற்கொள்வதற்கான வசதி எம்மிடம் உள்ளதனால் அவ்வாறானவர்களின் தகவல்களை உடனடியாக எம்மிடம் வழங்குமாறு பொது சுகாதார பரிசோதகர் கேட்டுக்கொண்டார்.
- வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் குறித்த விடுதியிலிருந்து வேறு விடுதிக்குள் செல்வதினை தடை செய்வதோடு நோயாளி வெளியே சென்று பொருட் கொள்வனவோ, சந்திப்புகளோ மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டது.
- தனிமைப்படுத்தலுக்கு உள்ளான குடும்பத்தினர்களின் அவசரமான மற்றும் முக்கியமான தேவைக்கான கொள்வனவினை (மருத்துவ தேவைகள்) நேரடியாக சென்று பெறாமல் விற்பனை பிரதிநிதிகளின் தொடர்பினை பெற்று தேவைகளை நிறைவு செய்வதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
நோய் நொடியின்றி இருக்க சுத்தமும் சுகாதாரமும்அவசியம்.
அரசும், சுகாதாரத்துறையும் இணைந்து பல விழிப்புணர்வுகளை மக்கள் முன்பு கொண்டு வந்திருக்கின்றன. இந்த நிலையில் இந்த வைரஸ் வருவதற்கு முன்பு பாதுகாப்பதே சிறந்தது.
நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலமாகவே இந்த வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.
- அடிக்கடி கையை சோப்பு போட்டு 20 நொடிகளாவது நன்கு தேய்த்துக் கழுவுங்கள்.
- கைகளைக் கழுவாமல் உங்களுடைய கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதியைத் தொடுவதைத் தவிர்த்திடுங்கள்.
- உடல் நலம் குன்றியவர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்
- நோய்த்தொற்று இருப்பதாக உணர்ந்தாலோ அறிந்து கொண்டாலோ வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள்.
- மற்றவர்களை உங்களுக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள்.
- சுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
- தும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை துணி அல்லது டிஸ்யூ கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.
- நீராவி கொண்டு ஆவி பிடியுங்கள். இருக்கும் இடத்தை கதகதப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுடுதண்ணீரில் தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.
- லேசாக முடியாதது போல உணர்ந்தீர்கள் என்றால், வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுங்கள். நிறைய நீர் ஆகாரங்களைச் சாப்பிடுங்கள்.
இதனைப் போன்றே நாம் டெங்கு நோய் தொற்றிலிருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்பதும் அவசியமாகும். டெங்கு நோய் பரவும் இடங்களை அடையாளங்கண்டு அவற்றை அழிப்பதோடு சுத்தமான சுகாதாரமான சூழலையும் நாம் உருவாக்கி நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளுவோம்.



